16 வயதுச் சிறுவன் செலுத்திய சொகுசு கார் 4 வாகனங்களை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ள இச்சம்பவம், கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிசர, பொது மயானத்துக்கு அருகில் இன்று (04) வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து நீர்கொழும்பு திசையாகப் பயணித்த அதி சொகுசு வாகனம் ஒன்று, வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு உந்துருளிகளையும், முச்சக்கரவண்டியொன்றையும், மகிழுந்து ஒன்றையும் மோதியுள்ளது.
சிறுவன் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் குறித்த வீதியை விட்டு விலகி விபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை, அவருடன் பயணித்த மற்றுமொருவர் பலத்த காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.