(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்றில் இடம் பெற்று வரும் "அக்கரைப்பற்று புத்தக காட்சி -2021, மூன்றாவது நாளில் , நூல் அறிமுகம் மற்றும் புத்தக பண்பாட்டை வளர்ப்பதற்கு அரும்பணியாற்றியவர் இருவருக்கு வாழ்நாள் விருதும், அத்தோடு புத்தக பண்பாட்டை வளர்க்க உதவிய இப்பிரதேச மூத்த புத்திஜீவிகளுக்குமான கெளரவிப்பு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (07) அக்கரைப்பற்று AIMS சர்வதேச பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பேஜஸ் புத்தக நிலையத்தின் உரிமையாளரும், புத்தக காட்சியின் பிரதம ஏற்பாட்டாளரும், ஆய்வாளருமான சிறாஜ் மஸ்ஹூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களும், பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் பேராசிரியர் திரு.குணபாலன் மற்றும் மூத்த இலக்கிய வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த புத்தகக் காட்சியில், புத்தகப் பண்பாட்டை வளர்ப்பதற்கு அரும்பணி ஆற்றிய இருவருக்கு 'வாழ்நாள் பங்களிப்புக்கான விருதுகள்' வழங்கி வைக்கப்பட்டன.
அதனடிப்படையில், 80 வயது நிரம்பிய லண்டனில் வசிக்கும் அன்புக்குரிய பத்மநாப ஐயர், மர்ஹூம் எஸ்.எம்.கமால்தீன் ஆகிய இருவருக்கும் இந்த வாழ்நாள் விருது வழங்கப்பட்டது.
அத்தோடு, புத்தக காட்சியை முன்னிட்டு நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கப்பட்டது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த சப்னாஸ் ஹாசீமின் நூல் உட்பட இன்னும் பல நூற்களும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டதோடு, இப்புத்தக காட்சி திங்கட்கிழமை (08) மற்றும் செவ்வாய்க்கிழமை (09) ஆகிய இரு தினங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.