(சியாத் எம் இஸ்மாயில்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு அன்பளிப்புச் செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட 24 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலையில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம் ஹனிபாவின் வேண்டுகோளுக்கிணங்க, அக்கரைப்பற்று மஸ்ஜிதுல் றகுமான் ஜும்ஆப் பள்ளிவாசலின் செயலாளர் ஏ.எச்.எம்.சிபாஸின் ஏற்பாட்டில், கொவிட் கால நிலைமை மற்றும் இரத்தப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு ''ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'' எனும் இறைவசனத்திற்கிணங்க இந்த இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
இம்முகாமில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள், பள்ளிவாசல் பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கியதுடன், பெரும்பாலானோர் இதில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.