(ஆதம்)
ஏறாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் ரெபுபாசத்தினை கட்சியிலிருந்தும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நீக்கியுள்ளது.
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ரெபுபாசம், பட்டியல் ஆசனத்தினூடாக ஏறாவூர் நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
ஏறாவூர் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர், நகர சபை தவிசாளர் தெரிவின் போது கட்சியினுடைய தீர்மானத்தினை புறக்கனித்தும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டதனால், சுதந்திரக்கட்சி அவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டது.
மேற்படி ஒழுக்காற்று விசாரணைகளின் தீர்ப்பினையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு, அவரது கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்து கட்சியில் இருந்தும் வெளியேற்றியுள்ளது.
ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மற்றுமொரு உறுப்பினரான எம்.எஸ்.எம்.ஜஃபர் என்பவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டதனால், அக்கட்சி அவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டு, அவரது உறுப்புரிமையையும் இரத்துச்செய்து கட்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது.
இதற்கினங்க, ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஆகியவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்குறித்த உறுப்பினர்களின் பதவிகள் நீக்கப்பட்டமை குறித்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.