(றிஸ்வான் சாலிஹு, பட உதவி - சஹீர் இலாஹி)
அக்கரைப்பற்று "பைத்துல் ஹிக்மா" கல்வி நிறுவனத்தில் கல்வி கற்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பும், விருது வழங்கல் நிகழ்வும் இன்று (25) சனிக்கிழமை காலை பைத்துல் ஹிக்மா பிரதான மண்டபத்தில், அதன் தலைவரும், உதவிக்கல்விப்பணிப்பாளருமான கலாநிதி.ஹனீபா இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிறுவனத்தில் சிறந்த முறையில் கல்வி கற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான 49 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு, 2020 ஆம் ஆண்டு வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் அதி சிறப்பு பெறுபேறுகள் பெற்ற பத்து மாணவர்களில் ஒருவராய் சாதனை படைத்த மாணவன் எம்.எஸ். அஜ்வத் அவர்களுக்கும் மாநகர முதல்வரால் விசேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களும், கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் அஷ்ஷெய்க். ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் அவர்களும், சிறப்பதிதிகளாக அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் ஏ.பீ.முஜீன், அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் எம்.எஸ்.நபார், கல்விமான்கள், பைத்துல் ஹிக்மா நிருவாகிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
சிறந்த பெறுபேற்றை பெற்று பல்கலைக்கழகம் செல்லுவதற்கு உளத்தூய்மையுடன் எவ்விதமான எதிர்பார்ப்புக்களையும் பார்க்காமல் சிறந்த கல்வி சமூகத்தை பெற வேண்டும் என்ற நல்நோக்கில் பல தடைகளையும் தாண்டி சிறப்பாக இந்த கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகளை நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பாராட்டி பேசியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.