போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்ஃபுத்தீன் சஹெப் அவர்கள், இன்று (11) சனிக்கிழமை முற்பகல், மிரிஹானையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு வருகை தந்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போரா சமூகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய பத்து இலட்சம் உறுப்பினர்கள் - இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கின்றனர். தாம் மிகவும் நேசிக்கின்ற இலங்கைக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதோடு, எதிர்காலத்திலும் தமது சீடர்களுடன் எமது நாட்டுக்கு வருகை தர தர தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் செய்ஃபுத்தீன் சஹெப் அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தொற்றொழிப்புக்கான நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த சஹெப் அவர்கள், இலங்கையின் வளர்ச்சியைத் தான் எதிர்ப்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கொவிட் 19 ‘செய்கடமை’ அறக்கட்டளைக்கு, போரா சமூகத்தின் தலைவர் செய்ஃபுத்தீன் சஹெப் அவர்கள் வழங்கிய உதவிக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததுடன், முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, எமதுநாட்டின் பொருளாதாரத்துக்கு போரா சமூகத்தினர் தொடர்ந்து வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.