கத்தாரில் சனிக்கிழமை (18) அந்நாட்டின் தேசிய தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி போக்குவரத்து அபராதங்களை 50 சதவீதம் மாத்திரம் செலுத்தும் சலுகைகள் ஆரம்பமாகியுள்ளது.
Traffic Violations Settlement Initiative என்ற பெயரில் போக்குவரத்து குற்றங்களுக்கு செலுத்த வேண்டிய அபராதத் தொகை 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களினால் சிக்கியுள்ளவர்கள் தங்களது போக்குவரத்து அபராதங்களில் 50 வீதத்தை மாத்திரம் செலுத்தினால் போதுமானது என்பதாகவும், அபராதங்களை Metrash2 ஊடாகவும் செலுத்திக்கொள்ள முடியும் என்பதாக கத்தார் போக்குவரத்துத்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2022ம் ஆண்டு முதல் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் பின்பற்றப்படவுள்ள நிலையில், தற்போது போக்குவரத்து அபராதங்களில் சிக்கியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் படி அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த 50 சதவீத தள்ளுபடி காலத்தில் தங்களது போக்குவரத்து அபராதங்களை செலுத்த தவறுபவர்கள், இறுக்கான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாகவும், இந்த போக்குவரத்து 50 சதவீத தள்ளுபடி சலுகையானது டிசம்பர் 18ம் திகதி முதல், 3 மாதங்கள் வரை நீடிக்கும் என்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.