(சமுர்தீன் நௌபர்)
கொவிட் தொற்று நோய் காரணமாக இங்குள்ள மக்கள் பல கஷ்டங்களை எதிர்நோக்கியதை நாங்கள் அறிவோம். இதன் முதல் கட்டமாக உங்களுக்கு சினொபாம் தடுப்பூசி வழங்கியிருந்தபோதும் எதிர்காலத்தில் இங்குள்ள மீனவர்களுக்கு உதவிகள் செய்ய காத்திருக்கின்றொம் என மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்ட இலங்கைக்கான சீனா நாட்டு உயர் ஸ்தானிகர் கியூ சேன் கோன் தெரிவித்தார்.
இலங்கைக்கான சீனா நாட்டு உயர் ஸ்தானிகர் கியூ சேன் கோன் தனது குழுவினருடன் வியாழக்கிழமை (16) மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு வருகை தந்திருந்த இவ் குழுவினரை மன்னார் மாவட்ட கடற்தொழில் சம்மேளன மீனவ சமூகத்தினரால் வரவேற்கப்பட்டிருந்தனர்.
மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள மண்டபத்தில் மன்னார் மாவட்ட கடற்தொழில் சம்மேளனத் தலைவர் அ.யஸ்ரின் சொய்சா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், வடக்கு மாகாண சபை செயலாளர் பொ.குகநாதன் மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சீனா உயர் ஸ்தானிகரினால் மீனவர்களுக்கான ஒரு தொகுதி வலைகளும் மற்றும் உலர் உணவுப் பொதிகளும் மீனவ சங்க பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டன.
இலங்கைக்கான சீனா நாட்டு உயர் ஸ்தானிகர் கியூ சேன் கோன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாங்கள் இங்கு உங்கள் பண்பாட்டு உடையுடன் (வேஷ்டி) வந்திருப்பது உங்களுடனான உறவைக் காட்டுவதற்கு. கொவிட் 19 தொற்று நோய் காலங்களில் இங்குள்ள மீனவ மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வந்ததை நாங்கள் புரிந்து கொள்ளுகின்றோம்.
இதனால் நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய வேண்டியது எங்களது கடமைகளில் ஒன்றாகும். இதனால்தான் நாங்கள் முதலில் உங்களுக்கு சினோபாம் என்ற தடுப்பூசியை முதலில் வழங்கினோம். நாங்கள் இப்பொழுது யாழ்ப்பாணத்துக்கும் இதைத் தொடர்ந்து மன்னாருக்கும் விஐயத்தை மேற்கொண்டுள்ளோம்.
இதன்போது நாங்கள் உங்கள் மீனவ குடும்பங்களுக்கு இருபது மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை கையளிக்க இருக்கின்றோம். இதில் ஆறு மில்லியன் ரூபாவுக்கு மீன்பிடி வலைகளையும் மற்றும் 14 மில்லியன் ரூபாவுக்கு தலா 6000 ரூபா பெறுமதியான மீனவ குடும்பங்களுக்கு 2500 உலர் உணவுப் பொதிகளையும் இன்று உங்களுக்கு கையளிக்கின்றோம்.
இந்த அன்பளிப்பானது சிறியதாக இருந்தாலும் எதிர்காலத்தில் நாங்கள் மேலும் உங்களுக்கு உதவி செய்ய இருக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.