(றிஸ்வான் சாலிஹு)
அரசாங்கத்தினால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "கிராமத்துடன் கலந்துரையாடல்" எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டம் தொடர்பாக கிராம மற்றும் பிரதேச மட்ட உயர்அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சிவில் நிர்வாக குழுக்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடலொன்று இன்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்சார் (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ. எல்.எம். அதாஉல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அத்தோடு, அக்கரைப்பற்று மாநகர கெளரவ முதல்வர் ஏ.அஹமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபை கெளரவ தவிசாளர் எம்.ஏ. றாசீக், அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.கே.றொசின்தாஜ், அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, பிரதேச செயலக திட்டமிடல் பிரதி பணிப்பாளர் ஏ.எம்.தமீம், பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல்.சர்தார் மிர்ஸா, உயரதிகாரிகள்,பொது நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள்,கிராம சேவை உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது அரசாங்கத்தினால் 2022ஆம்ஆண்டிற்கான பாதீட்டில் முன் மொழியப்பட்டுள்ள கிராமங்களை கட்டியெழுப்பும் நோக்கிலான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும், அதன் எண்ணக்கருக்கள், கிராம பிரதேசங்களில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.