அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின்பால் நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு அமைவாக "அனைவருக்கும் குடிநீர்" எனும் திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் நேற்று (28) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.புண்ணியமூர்த்தி சசிகலா, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பிரதம பொறியியலாளர் எம்.குமாரதாஸ், பொறியியலாளர் ரீ.திணேஷ்குமார் உள்ளிட்ட துறைசார் திணைக்கள அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிற்கும் மிக விரைவாக குடிநீர் திட்டத்தினை வழங்க வேண்டுமெனவும், அதிலும் குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் இன்னமும் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்காமையினால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருவதனால் முன்னுரிமையடிப்படையில் அவ்வாறான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தினை விரைவாக வழங்க வேண்டுமென மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் சம்மந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுக்கு இதன் போது ஆலோசனையினை வழங்கியுள்ளார்.
அத்தோடு மாவட்டத்தில் தற்போது வரைக்கும் 46 வீதமாக வழங்கப்பட்டிருக்கும் குடிநீர் இணைப்பினை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கு முன்னர் 85 வீதமாக உயர்த்தும் வண்ணமான நோக்காகக் கொண்டு தாம் செயற்படவுள்ளதாக பிராந்திய முகாமையாளர் எம்.குமாரதாஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டங்கள் தொடர்பாகவும், இதுவரை குடிநீர் வழங்கப்படாத பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களுடன் கலந்துரையாடி தேவையான உதவிகளை பெற்றுத்தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இதன்போது தெரிவித்துள்ளார்.