அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பு விஜயம்

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விடயங்களை கேட்டறிய மாவட்ட செயலகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகருக்கும்  மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (10) திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது உயர்ஸ்தானிகர் டேவிட் ஹெலி மாவட்டத்தின் சுற்றுலாத்துறை தொடர்பான அபிவிருத்தி விடயங்களை அரசாங்க அதிபர் கருணாகரனிடம் கேட்டறிந்ததுடன் புராதன சுற்றுலாத் தளமாகிய டச்சுக் கோட்டையினையும் பார்வையிட்டார். 

டச்சுக் கோட்டையின் 400 ஆண்டு நிறைவினை முன்னிட்டு, திறன் உள்ளடங்கிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் S4IG நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விசேட நூல் மற்றும் மட்டக்களப்பு டச்சுக் கோட்டையின் அபிவிருத்தி எனும் நூலும் அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது. 

இது தவிர மட்டக்களப்பில் அமைக்கப்பட்டு வரும் பொதுநூலகத்தின் மேல் தளத்தில் இலத்திரனியல் வாசிகசாலை ஒன்றை அமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு அரசாங்க அதிபர் கருணாகரன் உயரிஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார். 

இச்சந்திப்பின்போது மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், S4IG நிறுவனத்தின் முகாமையாளர் எஸ். மரீனா, S4IG நிறுவனத்தின் பிரதி குளுத் தலைவர் கமலநாதன் ஜெயதாஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலர் பிரசன்னமாயிருந்தனர். இதன்போது நினைவுப்பரிசுகள் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 








அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பு விஜயம் அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலி மட்டக்களப்பு விஜயம் Reviewed by Editor on January 10, 2022 Rating: 5