(றிஸ்வான் சாலிஹு)
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் காரியாலய உத்தியோகத்தர்களின் வருடத்தின் முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை உறுதியுரை நிகழ்வு இன்று (03) திங்கட்கிழமை காலை கல்லடி பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எம்.குமாரதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொறியியலாளர் ஜீ.கலாதீபன், பொறியியலாளர் ரீ.திணேஷ்குமார், சமூகவியலாளர் பீ.இஸ்ஹாக், வாணிப உத்தியோகத்தர் எம்.பீ.எம்.றிபாயுடீன், பிரிவுத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிராந்திய முகாமையாளர் அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்கு உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் இடம் பெற்றதோடு, இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தலைவர்களின் விசேட சொற்பொழிவும் இடம்பெற்றது.
கடந்த வருடம் (2021) மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலயம் மக்களுக்கு நீரிணைப்பு வழங்குதல், நீர்க்கசிவு வேலைகளை குறித்த நேரத்தில் நேர்த்தியான முறையில் செய்தல் போன்ற நீர்ப்பாவணையாளர்களின் தேவைகளை உடனடியாக செய்தும், தலைமைக்காரியாலயத்தினால் கொடுக்கப்பட்ட இலக்குகளை சரி வர முடித்தமையினால் எமது பிராந்தியத்திற்கு நற்பெயர் கிடைத்திருப்பது சகல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆற்றிய அரும்பணிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று பிராந்திய முகாமையாளர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.