கல்முனைப் பிராந்திய சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் - சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவிப்பு

(றியாஸ் ஆதம்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை சிறந்ததொரு கட்டமைப்பினைக் கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதன் கடந்தகால செயற்பாடுகள், இங்குள்ள உத்தியோகத்தர்களின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கள் பாராட்டத்தக்கதாகும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவியேற்றுக்கொண்ட வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸூக்கு திங்கட்கிழமை (24) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் யுனிசெப்பில் கடமையாற்றிய போது இலங்கையில் உள்ள அத்தனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும் விஜயம் செய்திருக்கின்றேன். கல்முனையைப் போன்று சிறந்ததொரு கட்டமைப்பினைக் கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட பணிமனையினை எங்கும் காணவில்லை. அவ்வாறானதொரு சிறந்த பணிமனைக்கு பணிப்பாளராக வரக்கிடைத்ததனையிட்டு சந்தோசமடைகின்றேன்.

நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற அடிப்படையில், ஒவ்வொருவரும் பல திட்டங்கள், அபிப்பிராயங்கள், கருத்துக்களைக் கொண்டிருக்கின்றோம். இருந்தாலும் எல்லோரும் ஒன்றினைந்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டுள்ளோம். குறிப்பாக இப்பிராந்தியத்தின் சுகாதாரத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கு என்னிடம் பல திட்டங்கள் உள்ளன. அதுதொடர்பில் உங்களோடு கலந்தாலோசிக்க உத்தேசித்துள்ளேன். அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய சூழல் உருவாகின்ற பட்சத்தில் இந்தப்பிராந்தியத்தினை இன்னும் பல படிகள் முன்னோக்கி நகர்த்த முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்குள்ளது.

குறிப்பாக இன்று தொடங்கும் இந்தப் புதிய பயணத்தில் சகலரும் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இப்பிராந்தியத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு இப்பணிமனையின் அத்தனை உத்தியோகத்தர்களினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றேன் என்றார்.






கல்முனைப் பிராந்திய சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் - சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவிப்பு கல்முனைப் பிராந்திய சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் - சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவிப்பு Reviewed by Editor on January 25, 2022 Rating: 5