(சர்ஜுன் லாபீர்)
அதி மேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களின் கொள்கைத் திட்டத்தின் கீழ் நாட்டில் ஒரு இலட்சம் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் தேசிய நிகழ்வு நாடு பூராகவும் இன்று (03) வியாழக்கிழமை காலை.8.52 மணிக்கு நடைபெற்றது.
அந்த வகையில் கல்முனை பிரதேச செயலகத்த்தின் கீழ் உள்ள 29 கிராம பிரிவுகளிலும் 203 வேலைத்திட்டங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்ட கல்முனை,கல்முனைக்குடி,மருதமுனை,நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் மேற்படி நிகழ்வுகள் கல்முனை பிரதேச செயளாலர் ஜே.லியாக்கத் அலி அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் வழிகாட்டலின் கீழ் சிறப்பாக நடைபெற்றன.
உணவு பாதுகாப்பு,புதிய வருமான வழிகள் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட மேலும் பல்வேறு வகையான திட்டங்களுடனும் பயன்களும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேற்படி வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வமான ஆரம்ப நிகழ்வு கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் ஜிப்ரி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
கெளரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் ஏ நஜிபர், பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால், பிரதி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டார உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடனும் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.