ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கப் போராட்டம்

மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனைக் காப்பாற்ற கிட்டத்தட்ட 4 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.

ஆபிரிக்க நாடான மொராக்கோவில் Chefchaouen மாநிலத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. 5 வயதான றயான் எனும் அந்தச் சிறுவன் கடந்த செவ்வாய்க் கிழமை மாலை நேரத்தில் 100 அடி (30 மீற்றர்) ஆழமுள்ள ஓர் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

சிறுவனின் அழுகை குரல் கேட்டதையடுத்து, கிணற்றுக்குள் சிறுவன் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மொராக்கோ மீட்புக் குழுவினர் புதன், வியாழன் என 48 மணிநேரங்களுக்கும் மேலாக சிறுவனை செங்குத்தாக மீட்க முயற்சித்தனர்.

கிணறு 32 மீற்றர் ஆழம் கொண்டது மற்றும் மேலே 45cm (18 அங்குலம்) விட்டத்தில் இருக்கும் அந்தக் கிணறு கீழே இறங்க இறங்க சுருங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக குழந்தையை  மீட்பவர்கள் கீழே செல்ல முடியாது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், இன்று கிணற்றின் பக்கவாட்டில் பிரம்மாண்ட இயந்திரங்களைக் கொண்டு, நேராக சிறுவன் இருக்கும் தூரம் வரை பாரிய பள்ளத்தை தோண்டி வருகின்றனர். தற்போதைய நிலையில், பக்கவாட்டில் கிணறு தோன்றும் திட்டத்தின்படி, கிட்டத்தட்ட சிறுவனை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் ஜெண்டர்மேரியில் இருந்து ஒரு மருத்துவ ஹெலிகொப்டர் மற்றும் சுகாதார அமைச்சின்  நிபுணர்களான மருத்துவ ஊழியர்கள் சிறுவன் வெளியே எடுப்பதை எதிர்பார்த்து சம்பவ இடத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் ஐந்து புல்டோசர்கள் சம்பவ இடத்தில் தோண்டி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிறுவன் உயிருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், கிணற்றுக்குள் கமெரா அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட்டுவரும் நிலையில், சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரிகள் கிணற்றுக்கு உணவு மற்றும் தண்ணீரை அனுப்பியதாகவும், தனது மகன் சிறிது தண்ணீர் குடிப்பதை மேலிருந்து வீடியோவில் கண்டதாகவும் சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.




ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கப் போராட்டம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கப் போராட்டம் Reviewed by Editor on February 05, 2022 Rating: 5