(எஸ்.எம்.அறூஸ்)
அம்பாரை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையிலான விளையாட்டு பெருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அம்பாறை நகரில் இடம்பெறவுள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான விளையாட்டுப் போட்டி ஒன்றினை அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.
இவ்விளையாட்டு பெருவிழாவின் ஆரம்பம் வைபவம் வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு அம்பாறை நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது
இறுதிப்போட்டி நிகழ்வுகளும் பரிசளிப்பு வைபவமும் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.
இறுதிப்போட்டி நிகழ்வுகளில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்
உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் வெள்ளிக்கிழமையே ஆரம்பமாகி முடிவடைய உள்ளது.
உதைபந்தாட்ட போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச சபை அணி இறக்காமம் பிரதேச சபை அணி, நாவிதன்வெளி பிரதேச சபை அணி, அம்பாறை நகர சபை அணி என்பன போட்டியிடுகின்றது.
சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கிரிக்கெட் எல்லே நீச்சல், பெட்மின்டன் போட்டிகளும் இடம்பெறவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள 18 உள்ளூராட்சி மன்றங்கள் இவ்விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
விசேடமாக பெண்களும் இப்போட்டிகளில் இடம்பெறுகின்றனர். குறிப்பாக கிரிக்கெட் போட்டியில் 9 ஆண்களும் இரண்டு பெண்களும் விளையாடுகின்றனர். அதேபோன்று இல்லை போட்டியில் 12 ஆண்களும் நான்கு பெண்களும் விளையாடுகின்றனர்.
பெட்மின்டன் போட்டியில் ஆண் பெண் தனி பிரிவாகவும் ,ஆண் பெண் கலப்பு இரட்டையர் பிரிவாகவும் போட்டிகள் இடம்பெறவுள்ளது.
இவ்விளையாட்டு பெருவிழாவில் வெற்றி பெறுகின்ற அணிகளுக்கும், வீராங்கனைகளுக்கும் பரிசுகளும், கிண்ணங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளமை விஷேட அம்சமாகும்.
அம்பாறை நகர சபை பொது விளையாட்டு மைதானம் மற்றும் வீரசிங்க விளையாட்டு மைதானங்களில் இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சபையின் உறுப்பினர்கள் மத்தியில் பரஸ்பர ஒற்றுமையையும் நட்பையும் வெளிக்கொண்டு வந்து இன ஐக்கியத்தை வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக இவ்விளையாட்டு பெருவிழா அமையவில்லை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்தகால வரலாறுகளை மாற்றியமைத்து இவ்வாறான விளையாட்டு விழாக்களை ஏற்பாடு செய்து அர்ப்பணிப்புடன் அதனை முன்கொண்டு செல்லும் அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி அவர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சபையின் கௌரவ தவிசாளர்கள், உறுப்பினர்கள் தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்விளையாட்டு பெருவிழாவில் பங்குபற்றுவதற்காக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சபையின் உறுப்பினர்கள் அடங்கிய அணிகள் தயார்படுத்தப்பட்டு வருவதுடன் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் ஆகியோரின் தலைமையில் அதற்கான கலந்தாலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.