(எஸ்.எம்.அரூஸ்)
சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் பொத்துவில் அறுகம்பே புளூ வேவ் ஹோட்டலில் இன்று (08) செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜெளபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மேஜர் ஜெனரால் (ஓய்வு) உமர் பாறுக் புர்கி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கெளரவ அதிதிகளாக சுற்றுலா பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பத்மா சிறிவர்த்தன பகிஸ்தான் தூதுவரின் ஊடக ஆலோசகர் கல்சூன் கைசர் ஜிலானி உட்பட சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் ஆலோசகர் திஸ்ஸ ஜெயவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யூசுப் நியாஸ் ஆகியோருடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , பொத்துவில் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் , ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் உகன பாடசாலை மாணவர்களின் நடனம் இடம்பெற்றதுடன், பெண்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் ஆளுமைகளினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன், கவிதைகள் வாசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இங்கு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரினால் பெண்களை தலைமையாக கொண்ட தெரிவு செய்யப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், மொபிடல் நிறுவனத்தினால் உலர் உணவுப்பொதிகளும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
அத்தோடு சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்காக டி சேர்ட்டுக்களும், சிறுவர்களுக்கான புத்தகப்பைகளும் வழங்கப்பட்டது.
சர்வதேச பெண்கள் தின நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கு பூரண அனுசரனையினை தேசத்தின் குரலாக இயங்கும் மொபிடல் நிறுவனம் மேற்கொண்டிருந்தது விசேட அம்சமாகும்.
மேலும் இந்நிகழ்வில் முப்படைகளில் பணியாற்றும் பெண்கள் உத்தியோகத்தர்கள், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தாதியர்கள், பெண் அமைப்புகளின் தலைவிகள், உறுப்பினர்கள் உட்பட பெருமளவான பெண்கள் இங்கு பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.