(றிஸ்வான் சாலிஹு)
புதுடெல்லிக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால சலுகைக் கடன் வசதி தொடர்பான உடன்படிக்கையில் இன்று (17) வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
கடந்த ஆண்டு (2021) டிசம்பரில் அமைச்சர் ராஜபக்ஷ அவர்களின் புதுடில்லி விஜயத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்ட நான்கு முக்கிய பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பாட்டின் முக்கிய அங்கமாக அமைந்த 1 பில்லியன் டொலர் கடன் வசதி, உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்திய நிதியமைச்சர் ஸ்ரீமதி. நிர்மலா சீதாராமன், இந்திய வங்கியின் நிர்வாக இயக்குநர் அஸ்வினி குமார் திவாரி, வங்கியின் பொது முகாமையாளர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இந்திய வங்கியின் சார்பாக பிரதிப் பொது முகாமையாளர் ஸ்ரீ புஷ்கர் ஜா கையெழுத்திட்டார்கள்.
இக்கையொப்பமிடும் வைபவத்திற்கு முன்னதாக, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை இந்திய நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வடக்கு பிளாக்கில் உள்ள நிதியமைச்சில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக சந்தித்தனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை அமைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இந்த சந்திப்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் இந்தியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நிலுகா கதுருகமுவ ஆகியோர் கலந்து கொண்டனர்.