(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறு தொழில் அபிவிருத்தி பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் சுயதொழில் வழிகாட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (22) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்ஸார் (நழீமி) அவர்களின் வழிகாட்டுதலில், பிரதேச செயலக சிறுதொழில் அபிவிருத்தி பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.சில்மியா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.ஏ.கே. ரொஷின்தாஜ் அவர்களும், கருத்தரங்கின் வளவாளராக சிறு கைத்தொழில் வணிக ஆலோசகர் யூ.முஹம்மட் தில்ஷான் கலந்து கொண்டார்.
வளவாளராக கலந்து கொண்ட தில்ஷான் ஆலோசனை வழங்கலில்,
எவ்வாறு ஒரு சுயதொழிலை ஆரம்பிப்பது? எவ்வகையான சுயதொழிலை ஆரம்பிப்பது? அதனை வெற்றிகரமாக கொண்டு செல்வது எப்படி? சிறு வணிகத்தின் சந்தைப்படுத்தல் உக்திகள்? ஒரு சிறு வணிகம் கைக்காள வேண்டிய ஆவணங்கள் உட்பட சுய முன்னேற்றம், சுயதொழில் தொடர்பான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை அவர் மிகவும் சிறப்பான முறையில் விளங்கப்படுத்தினார்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்து கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும் வெளிநாடு செல்ல முடியாதவர்கள், புதிதாக தொழில் ஆரம்பிக்கவுள்ளோர், தற்போது தொழிலில் ஈடுபடுவோர்கள் போன்றவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்றதோடு, இவர்கள் அனைவரும் எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தின் நன்கொடை மூலம் மிக விரைவில் புதிய சுயதொழிலை ஆரம்பிக்கவும் தொழிலை மேம்படுத்தவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.