பிரதமர் உட்பட 42 பேருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல்

பிரதமர் உள்ளிட்ட 42 பேருக்கு ஏப்ரல் 8ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் தொடர்பிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதியரசர்களான காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுக்கள் ஏப்ரல் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

உணவு, எரிவாயு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக் கைகளை எடுக்குமாறு பிரதமர் அமைச்சரவை மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரவை அமைச்சர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவையின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், நிதியமைச்சு உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்ட 42 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.



பிரதமர் உட்பட 42 பேருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிரதமர் உட்பட 42 பேருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் Reviewed by Editor on April 04, 2022 Rating: 5