சாய்ந்தமருது துர்நாற்ற விவகாரம் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள் - மேயரிடம் யஹியாகான் வேண்டுகோள்
(அஸ்லம் எஸ்.மௌலானா)
சாய்ந்தமருது பகுதியில் அண்மைக்காலமாக வீசும் துர்நாற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்த கல்முனை மாநகர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வேண்டுகோளில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
துர்நாற்றம் ஏற்படுவதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணமான நபர் அல்லது நபர்கள் எமது கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பின்வாங்கக் கூடாது.
சாய்ந்தமருது மக்கள் மிகக்கடுமையான துர்நாற்றத்தை தற்காலத்தில் எதிர்நோக்கி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக நான் சாய்ந்தமருதில் இருந்தபோது இதனை நன்கு உணர முடிந்தது. இது மிகப் பெரும் நோயை உண்டாக்கும் துர்நாற்றமாகவே மக்கள் பார்க்கின்றனர்.
கல்முனை மாநகர முதல்வர், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று கனகச்சிதமாக ஆய்வு செய்து, துர்நாற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து உரியவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் யஹியாகான் வலியுறுத்தியுள்ளார்.
Reviewed by Editor
on
May 17, 2022
Rating:
