(றிஸ்வான் சாலிஹு)
சர்வதேச ரீதியில் முதல் தடவையாக இந்தியாவின் கல்கத்தா நகரில் இம்மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை, மூன்று நாடுகள் இணைந்து நடாத்திய சர்வதேச புகைப்படக்கண்காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி காட்சிக்கு வைக்கப்பட்ட புகைப்படங்களில் கெளரவ விருது பெற்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (16) "கிளப் போட்டோ சிலோனிக்கா" ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.
புகைப்படக்கலைஞர் எம்.ஏ.அப்துல் மஜீட், இதற்கு முதல் பல வகையான புகைப்படங்களை எடுத்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இடம்பெற்ற கண்காட்சிகளின் போது பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றவராவார்.
இந்தியாவில் இடம்பெற்ற இப்புகைப்படக்கண்காட்சியில் இலங்கையிலிருந்து நான்கு புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, இதில் இவரின் புகைப்படத்திற்கு கெளரவ விருது கிடைத்தமை பாராட்டுக்குரியதோடு, இவ்வாறான ஓர் சர்வதேச நிகழ்வில் கெளரவ விருது பெற்றமை இதுவே முதல்தடவையாகும் என்பதும்குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் "கிளப் போட்டோ சிலோனிக்கா" அமைப்பின் தலைவர், தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.