அக்கரைப்பற்று மாநகர சபையில் மிகமோசமான நிதி நெருக்கடியால் குப்பைகள் தேங்கும் அபாயம், மக்களை உதவிக்கு அழைக்கும் - மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ்
(றிஸ்வான் சாலிஹு)
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அக்கரைப்பற்று மாநகர சபையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதனால் தின்மக்கழிவு முகாமைத்துவம் சிறப்பாக நடைபெற பொதுமக்களின் பங்களிப்பு அவசியமாகும் என்று அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ், வியாழக்கிழமை (05) இடம்பெற்ற மாநகர சபையின் அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மாநகர சபையின் பிரதான கடமைகளில் ஒன்று தின்மக்கழிவுகளை அகற்றும் பணியாகும்.அப்பணி கடந்த ஒரு மாதகாலமாக முன்னரை விட சற்று குறைந்த வேகத்தில் நடைபெறுவதனை பொதுமக்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது நிதி நிலைமை மோசமாக இருப்பதனால் ஏற்பட்டதாகும். இதற்கு காரணம் டீசல் விலை இருமடங்கு அதிகரித்ததும் வாகன உதிரிப்பாகங்களின் விலை பன்மடங்கு அதிகரித்தமையாகும்.
மாநகர சபையின் பிரதான வருமானம் ஆதன வரியாகும். இதுவரையில் 46 மில்லியன் ஆதன வரி மக்களால் செலுத்தப்படாமல் நிலுவையாக காணப்படுகின்றது. இதற்கு குப்பை அள்ளுப்படாவிட்டால், வீதி விளக்கு ஏரியாவிட்டால்,வடிகான் துப்பரவு செய்யப்படாவிட்டால், நீர் தேங்கி நின்றால் ஏன் பூனை செத்துக்கிடந்தால்கூட நாம் மாநகர சபையைத்தான் ஏசுகின்றோம் நாம் அவர்களைத்தான் அழைக்கின்றோம்.
ஆனால், நாளொன்றுக்கு சராசரியாக தத்தமது ஆதன மதிப்பிற்கு ஏற்ப பெருவாரியான வரி இறுப்பாளர்களுக்கு 5 ரூபாயும், குறிப்பிட்டளவினருக்கு 8 ரூபாயும், சிறு தொகையினருக்கு 13 ரூபாயும் தான் அறவிடப்படுகின்றது.
குப்பைகளை 3 தினங்களுக்குள் அகற்றாவிட்டால் என்ன நடக்கும் என்பதனையும் நாம் அறிவோம். அதனால் ஆதன வரி நிலுவை உடையவர்கள் உங்களால் முடியுமான தொகையினை மாநகர சபையில் செலுத்துங்கள் இல்லாவிட்டால் வீடுவீடாக வரும் அதிகாரிகளிடம் செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்று கொண்டு நமது பங்களிப்பை நிறைவேற்றுவோம் என்பதோடு, சமூர்த்தி பயனாளிகள், விதவைத் தாய்மார்கள், வருமானத்தை முற்றாக இழந்தவர்கள் வருமானம் இன்மையை உறுதிப்படுத்தி ஆதன வரிவிலக்கு பெற தகுதியுடையவர்களாகும் என்று அவர் தெரிவித்தார்.
Reviewed by Editor
on
May 06, 2022
Rating:
