(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கீழ் செளபாக்யா வேலைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் சிலருக்கு வாழ்வாதார உதவித்திட்டத்தின் மூலம் நெசவுக்கைத்தறி தொழிலுக்கான நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்வு புதன் கிழமை (23) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் இடம் பெற்றது.
அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன் பிரதம அதிதியாகக்கலந்து கொண்ட இந்நிகழ்வில் விஷேட அதிதியாக சே இயஸ் குடும்ப நிவாரண நிதியத்தின் பிரதிநிதியும் பொறியியலாளருமான கமால் நிஷாத் கலந்து கொண்டார்.
கெளரவ அதிதிகளாக மாவட்ட.திட்டமிடல் பணிப்பாளர் ரீ.மோகனகுமார் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 17 பயனாளிகளுக்கு ஏற்கனவே நெசவுக்கைத்தறி இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில் 5 பயனாளிகளுக்கு சே இயஸ் குடும்ப நிவாரண நிதியத்தின் பிரதிநிதியும் பொறியியலாளருமான கமால் நிஷாத்தின் அனுசரணையுடன் நெசவுக்கைத்தறிக்குத்தேவையான நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் பயனாளி ஒருவருக்கு தையல் இயந்திரமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் உட்பட திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செளபாக்யா திட்டத்திற்குள் சாய்ந்தமருது 06 09 14 16 மற்றும் 17 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.