(றிஸ்வான் சாலிஹு)
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு இன்று (01) செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.அன்சார் (நழீமி) அவர்களின் வழிகாட்டுதலில், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.ஹாறூன் அவர்களின் ஆலோசனையில், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் எம்.எம்.றுக்சானின் தலைமையில், சம்மேளனத்தின் பொருளாளர் ஹிசாம் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
இதில் வளவாளராக Global Advision தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், முன்னாள் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவருமான யூ.எம்.தில்ஷான் கலந்து கொண்டு இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளித்தார்.
இக்கருத்தரங்கில், முயற்சியாண்மையின் தேவைப்பாடு, வெற்றிகரமான வணிகம் ஒன்றை நடாத்தும் வழிமுறைகள், 20 சிறிய சுய தொழில் ஆலோசனைகள், சந்தைப்படுத்தல் தந்திரோபாயங்கள், அரச மற்றும் தனியார் துறையினரின் இலவச நிதி வசதிகளை பெறும் வழிமுறைகள் என்பன தொடர்பாக வளவாளர் தில்ஷானினால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த சுயதொழிலில் ஆர்வம் உள்ள 30 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இதில் பங்குபற்றியிருந்ததோடு, இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டிய ஒரு பங்குபற்றுனருக்கு பிரதேச செயலாளரினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.