13 வருடங்கள் கடந்தும், பாழடைந்து கிடக்கும் நுரைச்சோலை வீட்டுத்திட்டம்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட நுரைச்சோலையில் சவூதி அரேபியா நாட்டின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 13 வருடங்கள் கடந்தும் சுனாமிக்கு 18 வயதாகிய நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை கையளிக்கப்படவில்லை என்ற சம்பவம் இன்று வரைக்கும் அழியாத வலுவாக இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சுனாமி பேரலையால் வீடுகளை இழந்து நிர்க்கதியான அக்கரைப்பற்று மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபின் முயற்சியினால் சவூதி அரேபியா நாட்டின் நிதி உதவியில் 2005 ஆம் ஆண்டில் சுமார் 500 வீடுகள் அமைக்கும் திட்டம் இடம்பெற்று மக்களுக்கு கையளிக்கும் நிலையில் இருந்தது.

இவ்வீடுகள் இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  கையளிப்பதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வீடுகள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தாருக்கு மாத்திரம் வழங்கப்படுவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மூன்று இனத்தாருக்கும் விகிதாசார ரீதியாக பகிர்ந்தளிக்கும்படி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இன்றைக்கு 13வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் சுனாமிக்கு 18 வயதாகியும் இன்றுவரை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கையளிக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுடன் கூறி வருகின்றனர்.

இந்த வீடுகள் அமைந்துள்ள பகுதி தற்போது அடர்ந்த காடுகள் உள்ளனவாகவும், வீடுகள் கதவு மற்றும் ஜன்னல்கள் கழற்றப்பட்டு கவனிப்பாரின்றி காட்சியளிக்கின்றமையும் கவலைக்குரிய விடயமாகும்.

அக்கால கட்டத்தில் இருந்த இப்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபின் இத்திட்டத்திற்கு ஆதரவும் பங்களிப்பும் செய்திருந்தால் இத்திட்டத்தின் மூலம் இப்பகுதி மக்கள் இவ்வீடுகளை பெற்றிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







13 வருடங்கள் கடந்தும், பாழடைந்து கிடக்கும் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் 13 வருடங்கள் கடந்தும், பாழடைந்து கிடக்கும் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் Reviewed by Editor on December 27, 2022 Rating: 5