இந்தியாவில் மற்றுமொரு சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலி


(க.ஷியா)

இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி  மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் ஹர்சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிவானி நேற்று (03) வீட்டில் விளையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார்.

அவரை பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடியும் அச்சிறுமி கிடைக்கவில்லை. பின்னர் கர்நாலில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுமி விழுந்த விவகாரம் இரவு 9 மணிக்கு பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆழ்துளை கிணற்றின் அருகில் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி மீட்கும் முயற்சி இடம்பெற்று, சிறுமிக்கு ஒக்சிசனும் வழங்கப்பட்டது.

கமரா மூலம் பார்த்த போது சிறுமியின் கால்கள் மட்டுமே தெரிந்துள்ளதுடன் சிறுமி தலைகீழாக விழுந்த நிலையில் காணப்பட்டதுடன், இன்று காலை‌ சிறுமி மீட்கப்பட்டு உடனே வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டார்.

சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளதுடன்,ஆழ்துளை கிணற்றை மூடாமல் பெற்றோர் அலட்சியமாக இருந்ததால் சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

     
இந்தியாவில் மற்றுமொரு சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலி இந்தியாவில் மற்றுமொரு சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலி Reviewed by Editor on November 04, 2019 Rating: 5