புகையிரதத்தால் மோதுண்டு ஒருவர் பலி




(ஏறாவூர் நஸீர்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு
றஹ்மத் நகர், நாவலடியில் புகையிரத பாதைக்கு அண்மையில் வசித்துவரும் முகம்மது மௌபி அனீஸ் முகம்மது (27) என்பவரே மேற்படி சம்பவத்தில் பலியானவர் ஆவார்.

நான்கு  குழந்தைகளுக்கு தந்தையான இவர் வழமையாக, வீட்டுக்கு அருகாமையில் உள்ள புகையிரத பாதையில் இரவுச் சாப்பாட்டுக்கு பின்னர் ஆறுதலாக இருந்துவிட்டே வீடு வந்து நித்திரை கொள்வது வழக்கம்.

அவ்வாறுதான் நேற்றிரவும்(25) 8.00 மணியளவில் புகையிரத பாதையில் கணவனும் மனைவியுமாக பேசிக்கொண்டிருக்கும் போது, பிள்ளைகள் நித்திரைக்காக அழும் சத்தம் கேட்க
பிள்ளைகளை படுக்கவைப்பதற்காக மனைவி வீட்டுக்குள் செல்ல இவர் மட்டும் புகையிரத பாதையில் கால்களை நீட்டியவாறு ஆறுதலாக இருந்துள்ளார்.

மெல்லிய காற்றும் அப்பகுதியில் வீச, புகையிரத பாதையில் ஆறுதலாக இருந்தவருக்கு தூக்கம் போய்விட்டது.

அவ்வேளையில்தான் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் .செல்லும் புகையிரதத்தின் சத்தம் கேட்க, திடுக்கிட்டு எழுந்து ஓட முயற்சிக்கையில், சாறன் காலில் தடுக்கி புகையிரத பாதையில் இவர் விழுந்த அதே கணத்தில் புகையிரதத்தால் மோதப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார்.

சம்பவத்தை நேரடியாக கண்ட புகையிரத சாரதி பொலிசாருக்கு தகவலை எழுத்து மூலம் கொடுத்துள்ளார்.

தலையிலும் , உடம்பின் பல்வேறு இடங்களிலும் பாரிய  காயங்களுக்குள்ளான இவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.

வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதியின் பணிப்புரைக்கமைய சம்பவ இடத்திற்கு,நேரடியாக  சென்ற மரண விசாரனைஅதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரனைகளை மேற்கொண்டதன் பின்னர், பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புகையிரதத்தால் மோதுண்டு ஒருவர் பலி புகையிரதத்தால் மோதுண்டு ஒருவர் பலி Reviewed by Editor on February 26, 2020 Rating: 5