(நீலமேகம் பிரசாந்த்)
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதி என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான மருதபாண்டி ரமேஷ் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை அரசாங்கம், கம்பனிகள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நாளை (13) கைச்சாத்திடவிருந்த நிலையில் குறித்த நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரமேஷ் மேலும் கூறியதாவது,
" நாளைய தினம் கைச்சாத்திடப்பட வேண்டிய ஒப்பந்தத்தில் சில சரத்துகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.பெருந்தோட்ட மக்களின் நன்மை கருதியே இவ்வாறு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அச்சரத்துக்கள் மாற்றியமைத்த பின்னர் மீண்டும் முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.இது சம்பந்தமாக பலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை மக்களிடத்தில் சேர்க்க முனைவார்கள். எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை.மார்ச் முதலாம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பளம் நிச்சயம் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முத்தரப்பு ஒப்பந்தம் ஒத்திவைக்கப்பட்டது ஏன்? இ.தொ.கா. விளக்கம்
Reviewed by Editor
on
February 12, 2020
Rating:
Reviewed by Editor
on
February 12, 2020
Rating:
