(அனார்)
மரமே வரைந்தது தன்னையும்...
தனக்கென கூடும், பறவையும்
நிறங்களை எதிரொலித்துக் கொண்டிருந்த சுவர் ஓவியத்தில்
இரண்டாகப் பிளந்த தாரகை ஒன்றுக்கொன்று
கதைசொல்லிக் கொண்டிருந்தது
கூட்டைக் கண்காணிக்கும் கழுகின் கண்கள் பற்றி
கூட்டினை தூக்கிக் கொண்டு கனவெல்லாம் அலைகிறேன்
நல்ல வெளிச்சம் இருக்கின்றது
குகையிலிருந்து பேரழுகை அதிர்வுகள் வந்து விழுகின்றன
நதிக்கரை அமைதியாக இருக்கிறது
கூட்டை மறந்து வைத்துவிட்டேன்
பறவை கதறுகின்றது
கனவுக்குள்ளே
முழு ஏமாற்றத்துடனும் முட்டி மோதுகிறேன்
உன் செல் அழைப்பு .....
மாலை நடையாக ஊர்கின்ற
வார்த்தைகளைப் பிடித்துப் பிடித்து
செவிகளுக்குள் நத்தைகள் ஏறுகின்றன
சந்திரனின் குறுக்காக
நாம் பயணிக்கும் மந்திரப் பாய்கள்
மரத்தை விட்டும் தொலைவிலே தெரிகின்றது
இப்போது சுவர் ஓவியத்தில்....
சுவர் ஓவியம்....
Reviewed by Editor
on
February 28, 2020
Rating:
Reviewed by Editor
on
February 28, 2020
Rating:
