உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாத்துப் பலப்படுத்தும் பொருட்டு மாகாண மட்டத்தில் நாளாந்தப் பொருளாதாரச் செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புகளைக் கண்டறியும் நோக்குடன் மாகாண மட்டத் தகவல்களைக் கேட்டறிவதற்கான பிரத்தியேக கலந்துரையாடல் இன்று (15) புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.
நாட்டின் அனைத்து மாகான சுகாதாரப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட சுகாதார துறை அதிகாரிகள் தமது மாகாணங்களின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கினார்கள்.
தற்போதைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு கைத்தொழில், விவசாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னர் போன்று முன்னெடுப்பதற்குத் தேவையான பணிப்புரைகளை, மாவட்ட மட்ட சுகாதாரப் பணிப்பாளரின் ஊடாக உடனடியாக முன்வைக்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மாகாண மட்டத்தில் கிடைக்கப்பெறும் சுகாதாரப் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு தற்போதைய கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டதோடு,அந்தந்த மாகாணங்களில் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள், அவ்வாறு பழகியவர்களுடன் பழகியவர்கள் மற்றும் தற்போது செயற்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா நோய்க்கிருமி ஒழிப்புக்கு எமது அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் மிகவும் பயனுறுதி வாய்ந்தவை என மாகாண சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சுகாதாரத் துறையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளைச் சீரமைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கும் தற்காலச் செயற்பாடுகளை ஓரு வாய்ப்பாக ஆக்கிக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்களிடம் வேண்டிக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதி செயலாளர் பீ. பி. ஜயசுந்தர, ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்த்தன, கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ற் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் சீ. டீ. விக்ரமரத்ன, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி முகநூல் பக்கத்திலிருந்து)
அரச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு
Reviewed by Editor
on
April 15, 2020
Rating:
Reviewed by Editor
on
April 15, 2020
Rating:

