ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக வைரஸ் தொற்று காலத்துக்கு முன்பு போல் அல்லாமல் அதன் பின்னர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நாம் சிந்தித்து செயல்படுவது அவசியம் என்று தெரிவித்த அவர், குறிப்பாக அரச ,அரச சார்பற்ற மற்றும் ஏனைய நிறுவனங்கள் கைத்தொழில் துறை நிறுவனங்கள் உட்பட அத்தியவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் இணையதளத்திலும், பிரதமர் அலுவலக இணைய தளத்திலும் அதனை பார்வையிட முடியும். இதனை அறியவில்லை எனக் கூறி தட்டிக்கழிக்க முடியாது என்று தெரிவித்த பணிப்பாளர் நாயகம் இந்த விடயங்களில் தெளிவில்லை என்றால் எமது அதிகாரிகள் குழு அதனை தெளிவுபடுத்த தயாராக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சு தவிர்ந்த வெளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர் பரிசோதனைகள் தரமற்றவையென மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ,இவ்வாறு தற்போது பிரசாரங்களை மேற்கொள்பவர்களே முன்பு அதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கற்கை பீடங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்தனர் பிசிஆர் பரிசோதனையா- அல்லது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளா? எது மிக முக்கியமென பார்க்கும்போது தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மிக முக்கியமானதும் அவசியமுமாகிறது. தனிமைப்படுத்தலுக்குப் பின்னரும் கூட பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். எனினும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு தனிமைப்படுத்தல் மிக முக்கியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எவ்வாறெனினும் பரிசோதனைக்கூடங்கள் தற்போது விரிவாக்கப்பட்டு பரிசோதனைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே பரிசோதனைகளை முன்னெடுத்த போதும் கொரோனா வைரஸ் தொடர்பான பிசிஆர் பரிசோதனை தொடர்பில் அவர்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது. அதேவேளை இத்தகைய பரிசோதனை கூடங்கள் ஆரம்பிக்கப்படும் முன்பே அது தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது. நாம் அதற்கு மேலதிகமாக தற்போது மேற்படி பரிசோதனைக் கூடங்கள் தொடர்பில் மேலும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதனையடுத்து நாம் பேராசிரியர் மலிக் பீரிசின் ஒத்துழைப்புடன் சகல பரிசோதனைக் கூடங்களையும் தனித் தனியாக தரப்படுத்தலுக்கு உட்படுத்த உள்ளோம். அதேபோன்று எமது நீண்ட கால வேலைத்திட்டமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் அவற்றை தரநிர்யம் செய்வதற்குமன உத்தேசித்துள்ளோம். எவ்வாறாயினும் காலத்துக் காலம் பொருத்தமான வகையில் அவற்றை கண்காணிப்புக்கு உட்படுத்துவது இடம் பெறும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
ஊரடங்கு இல்லாத நேரத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
Reviewed by Editor
on
May 09, 2020
Rating:
