(சட்டத்தரணி ஆஸாத்)
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக நீண்ட காலம் பணியாற்றிய எம்.ரீ.எம். நிஸாம் அவர்களின் பணியினை கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ரோஹித போகொல்லாகமவினால்இடைநிறுத்தப்பட்டு இருந்ததுடன், மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.கே.எம்.மன்சூர் ஆளுநரினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், மாகாண கல்விப் பணிப்பாளராக நிஸாம் அவர்கள் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் நியமிக்கப்பட்டார்.
மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் செய்யப்பட்ட இந்நியமணத்தை எதிர்த்து மாகாண மேல் நீதிமன்றத்தில் மன்சூரினால் தொடரப்பட்ட வழக்கினை ஆராய்ந்த மேல் நீதிமன்றம், நிஸாம் அவர்களை மாகாண கல்வி பணிப்பாளராக செயற்படுவதற்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அத்துடன் குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பு வழங்கும் வரை குறிப்பிட்ட தடை உத்தரவானது அமுலில் காணப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பானது 01.06.2020 அன்று திருகோணமலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ மானிக்கவாசகர் இளஞ்செழியனினால் வழங்கப்பட்டிருந்ததுடன்; குறித்த தீர்ப்பில் மன்சூர் அவர்கள் தொடர்ந்தும் மாகாணக் கல்விப் பணிப்பாளராக செயற்பட அனுமதி அளித்திருந்தது.
மாகாண மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மீளாய்வு மனுவானது நீதியரசர்களான ஸிறான் குணதிலக மற்றும் ருவான் பெர்ணான்டோ முன்னிலையில் நேற்று (14) எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது திருகோணமலை மாகாண மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம்.அலி சப்ரி ஆஜராகியிருந்தார்.
திருகோணமலை மாகாண மேல் நீதிமன்றில் முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் சார்பில் சட்டத்தரணி கலாநிதி யூ.எல்.அலி சக்கி தோன்றியிருந்ததுடன் திருகோணமலை மாகாண மேல் நீதிமன்ற தீர்ப்பினை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவும் சட்டத்தரணி அலி சக்கி தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மன்சூர் செயற்பட நீதிமன்றம் தடை
Reviewed by Editor
on
July 15, 2020
Rating:
Reviewed by Editor
on
July 15, 2020
Rating:
