நாட்டின் அனைத்து வீதிகளையும் அடுத்த நான்கு வருட காலப்பகுதிக்குள் புனர்நிர்மாணம் செய்தாக வேண்டும்

(றிஸ்வான் சாலிஹூ)

செயற்திறன் மிக்க தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன் வருவதோடு, பல மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கி, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு செயற்திறமாக நீங்கள் பங்களிக்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களிடம் ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கும் கலந்துரையாடல் திங்கட்கிழமை (31) பிற்பகல் ஜனாதிபதி செலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்து அரச பொறிமுறையை வினைத்திறனாக பயன்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்வதற்கு மாவட்டக் குழுத் தலைவர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கு அமைச்சர்கள் அல்லாத இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, அவர்களது முழு நேரத்தையும் அதற்காக செலவிடுவதற்காக ஆகும்” என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல மாவட்டங்களுக்கு பொதுவான மற்றும் அந்த மாவட்டங்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்சினைகளை அரசாங்கம் கண்டறிந்துள்ளது. குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகள் நீர்ப்பாசன புனரமைப்பு, காட்டு யானைகள் கிராமங்களுக்கு வருதல், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் உள்ள குறைபாடுகளை துரிதமாக நிறைவேற்றுவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

அவற்றை நிறைவேற்றுவதற்காகவே  அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் நியமனங்களை வழங்கும்போது  மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களையும் நியமித்தேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களினதும் நிலைமைகளை மீளாய்வு செய்வதற்கும், பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தீர்வுகளை வழங்குவதற்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு வரை அரசாங்கம் நடைமுறைப்படுத்திய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் சிலவற்றின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அதனால், எதிர்வரும் வரவுசெலவு திட்டத்தில் அவற்றுக்கு நிதியை ஒதுக்கீடு செய்து இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து நிர்மாணப் பணிகளினதும் வேலைகளை நிறைவு செய்ய வேண்டும் என்றும் பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் இதன் போது தெரிவித்தார். 

A, B, C, D என வகைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் அனைத்து வீதிகளையும் எனது இந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே “காப்பட்” செய்து அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். 

“அமைச்சுக்களின் கடமைகள் மற்றும் அதிகாரிகளுடன் சம்பந்தபபட்டு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அரசியல்வாதிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்றும் மாவட்ட குழு தலைவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தங்களிடம் எதிர்பார்த்து வேண்டி நிற்கும் ஒத்துழைப்பை அவருக்கு வழங்கி, நாட்டை முன்னேற்றுவதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி தெரிவித்தனர். 

ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


நாட்டின் அனைத்து வீதிகளையும் அடுத்த நான்கு வருட காலப்பகுதிக்குள் புனர்நிர்மாணம் செய்தாக வேண்டும் நாட்டின் அனைத்து வீதிகளையும் அடுத்த நான்கு வருட காலப்பகுதிக்குள் புனர்நிர்மாணம் செய்தாக வேண்டும் Reviewed by Editor on September 01, 2020 Rating: 5