
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை தொடர்ந்து எமது நோயாளிகள் தமது நோய் நிலைமைகளுடன் வீட்டில் இருந்து கொண்டு அவதியுறுவதாக நாம் அறிகின்றோம் என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் நிர்வாகம் தெரிவித்துள்ள அறிக்கையில்,
தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்று அபாயம் காரணமாக அதற்கான அன்டிஜன் சோதனை மேற்கொள்ளப்படுவது குறித்து பொய்யான பிரச்சாரங்கள் சில சமூக ஊடங்கள் மற்றும் உறுதிப்பாடுகள் அற்ற தகவல் பரிமாற்றங்கள் காரணமாக எமது பொதுமக்கள் மிகப்பாரதூரமான தொற்றா நோய்களுடன் தமக்கான சிகிச்சைகள் எதுவுமின்றி அல்லல் படும் நிலைமை குறித்து எம்மால் கவனீனமாக இருக்க முடியாது .
எமது வைத்தியசாலையின் சேவைகள் வெளிநோயாளர் பிரிவில் வழக்கம்போல் இடம்பெறுகின்றது என்பதுடன் அங்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .
அத்துடன் பற்சிகிச்சை கிளினிக் மற்றும் கண் காது மூக்கு தொண்டை கிளினிக் என்பனவும் வழமை போல் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
எனவே எமது நோயாளிகள் தங்களை சிகிச்சைகள் இன்றி வருத்திக்கொண்டு இருக்காமல் தங்களது சிகிச்சைகளை தொடர எமது வைத்திசாலைக்கு எந்தவிதமான அச்சமோ குழப்பமோ இன்றி வருகை தரலாம்.
மேலும் , நோயாளி ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார் என்று எமது வைத்தியர்கள் சந்தேகித்தால் மட்டுமே தொற்றுக்குள்ளானவருக்கான அண்டிஜென் பரிசோதனை நடைபெறும்.
குறிப்பாக நோயாளிகளை விடுதிகளுக்கு அனுமதிக்கும் போது அவசியம் ஏற்பட்டால் தவிர அண்டிஜென் பரிசோதனை நடைபெறாது.அதாவது வைத்தியர்கள் சந்தேகித்தால் மட்டுமே தொற்றுக்குள்ளானவருக்கான அண்டிஜென் பரிசோதனை நடைபெறும் என்று வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
