
(பாறுக் ஷிஹான்)
புரவி புயலை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் அடை மழை தற்போது பெய்து வருகிறது.
நேற்று (6) இரவு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை , இறக்காமம் , மல்வத்தை, பகுதிகளில் பெய்த மழை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டதுடன் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் சம்மாந்துறை பகுதி வளத்தாப்பிட்டி வில்வம் குளத்தில் நீர் நிரம்பி வெளியேறியதுடன் குளத்தின் அருகில் சென்ற வாகனமும் வெள்ளத்தில் சிக்கியது.
இதேவேளை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சொறிக்கல்முனை, சம்மாந்துறை பகுதிகளை இணைக்கும் வழுக்கமடு பாலம் நீரில் மூழ்கி காணப்பட்டதுடன் வயல் நிலங்களும் நீரில் மூழ்கின.
நாவிதன்வெளி பகுதியில் உள்ள வயல் நிலங்களில் சிலரால் சட்டவிரோதமாக நீர்ப்பாசன கால்வாய்கள் அடைக்கப்பட்டுள்ளமையினால் நீர் வடிந்தோட முடியாத நிலைமை தோன்றியுள்ளது.பாய்ந்தோடும் வெள்ள நீர் கிட்டங்கி பாலத்தின் ஊடாக வான்பாய்ந்து மிக வேகமாக செல்வதனால் மீனவர்கள் அவதானமாக செயற்பட்டு வருகின்றனர்.
குறித்த வெள்ள நீர் பாய்ந்தோடுவதனால் அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை வெள்ளநீர் வடிந்து செல்வதற்காக சல்பீனியா தாவரங்களை அகற்றும் முயற்சியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொண்டுள்ளனர்.
Reviewed by Editor
on
December 07, 2020
Rating: