
தேசிய பொங்கல் விழாவிற்கு இணைவாக அரச அலுவலங்களிலும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் தமிழர் பாரம்பரிய முறைப்படி இன்று (20) புதன்கிழமை இடம்பெற்ற பொங்கல் விழாவில் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் உள்ளிட்ட பிரதேச செயலக உயர் அதிகாரிகள் மற்றும் சகல மதங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பல பானைகளில் பொங்கலிடும் நிகழ்வுகள் பல பிரிவு உத்தியோகத்தர்களினாலும் மேற்கொள்ளப்பட்டன. இதேவேளை, பிரதான பானையில் பொங்கலிடும் நிகழ்வை பிரதேச செயலாளர் ஆரம்பித்து வைத்தார்.
உழைக்கும் மக்களால் சூரிய பகவான் உள்ளிட்ட இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பிக்கும் இந்நிகழ்வில் பிரதேச செயலாளரது வழிகாட்டலில் உத்தியோகத்தர்கள் பொங்கிவரும் பானைகளில் அரிசி இட்டு மகிழ்ந்ததுடன் பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று மருதடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கஜமுகசர்மா இப் பொங்கல் பூஜை வழிபாடுகளை நடாத்தி வைத்தார்.
Reviewed by Editor
on
January 20, 2021
Rating: