சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் – ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இசை – தமன். ஒரு மாதத்துக்குள் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துத் தந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சிம்பு. மாதவ் மீடியாவின் மாதவ் காப்பா தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் ஓடிடியிலும் ஈஸ்வரன் படத்தை வெளியிடத் தயாரிப்பாளர் முடிவு செய்தார். ஒலிஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிநாட்டில் ஜனவரி 14 முதல் கட்டணம் செலுத்தி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஓடிடியில் ஈஸ்வரன் படம் வெளியானால் திரையரங்கில் படம் பார்க்க மக்கள் வரமாட்டார்கள், ஓடிடியில் வெளியாகும் ஈஸ்வரன் படம் முறைகேடாக இணையத்திலும் வெளியாக வாய்ப்புள்ளது போன்ற காரணங்களினால் தயாரிப்பாளரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஜனவரி 14 அன்று ஈஸ்வரன் படம் ஓடிடியில் வெளியானால் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என முடிவெடுத்தார்கள்.
இதையடுத்து ஈஸ்வரன் படம் ஓடிடியில் அடுத்த மூன்று வாரங்களுக்கு வெளியாகாது என படத்தயாரிப்பாளர் மாதவ் காப்பா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடுகளில் ஈஸ்வரன் படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் நிலவுவதால் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் கண்டு ரசிப்பதற்காக பணம் கொடுத்துப் பார்க்கும் வசதி கொண்ட ஒலிஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்கள் முடிவில் மாற்றம் செய்து, மூன்று அல்லது நான்கு வாரத்துக்குப் பிறகே இதுபோன்ற தளங்கள் வாயிலாக வெளிநாடுகளில் வெளியிடுவது என முடிவெடுத்திருக்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
![3 வாரங்களுக்குப் பிறகே வௌியாகும்…](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOvRWh-QHZdo4ch7Xd2Bn2ezQQqsDyW-k1s8kfXdmqIwH9u-vpDIvyEOZb8PYEad08IOLquqHPW23oqhLT41WscwUJAu0MqaP7CQkjmwbxv8-0djKuwwXUvS007AqrqqBWgdudy_RjzISo/s72-c/eeswaran.jpg)