கோவிஷீல்ட் வக்சீன் போடலாமா? வேண்டாமா?


பத்து நறுக் கொஸ்டீன்களும் பத்து ஆஷம் ஆன்ஸ்வர்களும். இன்றைய நாட்களில் ஒவ்வொருவரிடமும் தற்போது உள்ள முக்கியமான கேள்விகள் இந்த பத்தும் தான். 

டாக்டர்கள் தொடங்கி, நேர்ஸ்கள், சுகாதார ஊழியர்கள், பொது மக்கள் என எல்லோரும் தற்போது தெரிந்து கொள்ள ஆசைப்படுகன்ற COVISHIELD வக்சீன் குறித்தான சந்தேகங்களும் அதற்கான பதில்களும் இலகுக்காக கேள்வி பதில் வடிவில் தரப்படுகிறது. ரைட் போலாம்.

1. இது இந்தியாவின் வக்சீனா? (இது நல்லண்ணையா!? டோனில் வாசிக்க)

இல்லை. இது  Astrazeneca (https://www.astrazeneca.com/) எனும் பன்னாட்டு மருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு கம்பனியும் - Oxford பல்கலைக்கழகமும் கூட்டினைந்து கண்டுபிடித்த வக்சீன். இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இங்கிலாந்தில் உளள் மக்களுக்கும் இந்த வக்சீனும் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது COVISHIELD எனும் பெயரில் இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இது உலக நாடுகளுக்கு கோவிட் வக்சீனை இலவசமாக வழங்கும் செயற்திட்டமான GAVI-COVAX (https://www.gavi.org/) மூலம் உலகின் மிகப் பெரிய வக்சீன் தயாரிப்பு நிறுவனமான Serum institute India (https://www.seruminstitute.com/) இல்  தயாரிக்கப்படுகிறது. (மேட்டர் அவ்வளவு தான்)


2. இந்தியா உற்பத்தி செய்யும் வக்சீனை நம்பலாமா?

(மைன்ட் வொய்ஸ்: சந்தேகத்துக்கு பொறந்தவனா இருப்பானோ!) நம்பலாம். இதுவரை உலகில் வழங்கப்படும் பெரும்பாலான வக்சீன்களில் 60%வை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இது வரை காலமும் நமது குழந்தைகளுக்கு கொடுத்த வக்சீன்களில் பெரும்பாலானவை இந்தியாவிலே உற்பத்தி செய்யப்பட்டவைகளே. நாம் பாவிக்கும் BCG, TT, MMR, DTP போன்ற வக்சீன்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுபவைகளே. (https://www.seruminstitute.com/product_overseas.php)

3. (இந்த கேள்விய கேட்டு இவர மடக்குவம்)கோவிஸீல்ட் வக்சீன் வழமைக்கு மாறாக, மிகவும் குறுகிய காலத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஏதும் பிரச்சினைகள் ஏற்படுமா?

வழமையான வக்சீன்கள் (traditional vaccine) கண்டுபிடிப்பு முறை மற்றும் பாவனைக்கு அனுமதி போன்றன மிக நீண்ட காலத்தை எடுக்கும் செயற்திட்டங்களாக இருந்தன என்பது உண்மை தான். ஆனால் இந்த கோவிஸீல்ட் வக்சீன் ஆல்ரெடி பரீட்சார்த்த முயற்சியில் இருந்த வேறு வகையான ஒரு புது தொழில்நுட்பம் ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்டதால் மிக குறுகிய காலத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மற்றைப்படிக்கு இதில் எந்த சோர்ட் கட்களும் இல்லை. மற்றைய வக்சீன்ளுக்கான பாதுகாப்பு முறைமைகள் எதுவும் மீறப்படாமலேயே இந்த வக்சீன் தயாரிப்பு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4. இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ள புது வகை தொழில்நுட்பம் என்ன என்பது பற்றி விளக்க முடியுமா ?

முடியும்.( ஆமா இவரு பெரிய எலோன் மஸ்கு!! கேட்டு தெரிஞ்சி கம்பனி ஆ ஆரம்பிக்க போறாரு!) சிம்பன்சி குரங்கு இனத்தில் சளிக் காய்ச்சல் மற்றும் இருமலை உருவாக்கும் அடினோ வைரஸை Adeno வகை virusகளை ஒரு காவியாக (vector) பயன்படுத்தி இந்த வக்சீன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது அடினோ வைரஸிலிருந்து அதன் மூலமரபணுக் கூறுகளை நீக்கி விட்டு, அந்த இடத்தில் தற்போதய பண்டீமிக்கு காரணமான கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்களை உருவாக்கும் மூல மரபணுக்கூறுகளை கொண்டு நிரப்பி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட அடினோ வைரஸும் கொரோனா வைரஸும் இணைந்த ஒரு கூட்டுக்கலவையே இந்த வக்சின்.

இதில் உள்ள அடினோ வைரஸ் மனிதர்களிடத்தில் நோய் உருவாக்க இயலாத தன்மை கொண்டது, அதனால் அது பாதுகாப்பானது.  ஏனெனில் ஊசி மூலம் மனித உடலுக்குள் செலுத்தப்படும் இந்த தடுப்பூசிக்குள் இருக்கும் இந்த அடினோ வைரஸுக்கு நமது உடலில் பல்கிப்பெருகும் தன்மை கிடையாது. இதை மலடாக்கப்பட்ட வைரஸ் என்று கூட சொல்லலாம்.

ஒரு தரம் போடப்படும் வக்சினில் கிட்டத்தட்ட ஐம்பது பில்லியன் வைரஸ்கள் செலுத்தப்படும். (50 பில்லியன் வைரஸா என்ன சார் சொல்றீங்க ?)

"(இவனுக்கு இப்ப களிசனுக்க ச்சூ போயிருக்கும்)" ஆமா.. அந்த அம்பது பில்லியன் வைரஸும் நமது உடலுக்குள் நுழைந்ததும் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதங்கள் உருவாக்கும் வேலையை செய்யத்தொடங்கும். இந்த ஸ்பைக் புரதங்கள் தான் கொரோனா வைரஸின் வீரியத்துக்கு காரணமாக இருந்தவை. ஆகையால், இந்த புது வகை ஸ்பைக் புரதங்களை கண்டதும் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் (IMMUNE SYSTEM) கொரோனா வைரஸ் தான் உடலுக்குள் வந்திருக்கிறது என்று நினைத்து அந்த ஸ்பைக் புரதங்களுக்கு எதிராக அண்ட்டிபடிகள்(Antibodies) எனும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தொடங்கும். இதுவே கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியாக பரிணமிக்கும். இதன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாமால் தீவிர நோய் நிலைகள் உருவாகாமல் பாதுகாக்கபடும். இந்த வக்ஸின் எப்படி வேலை செய்கிறது என்பதை விரிவாக அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இதை பார்வையிடவும்.
https://www.nytimes.com/interactive/2020/health/oxford-astrazeneca-covid-19-vaccine.html

5. யார் யார்  இந்ந தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்? யார் யார் இது போடக் கூடாது?

(இது கேள்வி) 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மட்டுமே ஆராய்ச்சிகள் செய்யப்பட்டிருப்பதாலும்,  65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இந்த தடுப்பூசி எத்தகைய எதிர்ப்பு சக்தியை தரும் என்பதற்கும் தற்போதைக்கு ஆய்வு முடிவுகள் இல்லை என்பதாலும் , 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் 65ற்கு கீழானவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியும்.

அது போல, கர்ப்பிணிகளிடத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களிடத்திலும் இந்த தடுப்பூசி எத்தகைய நிலையில் வேலை செய்யும் என்பது குறித்த போதுமான தகவல்கள் இதுவரை  இல்லை என்பதால் மகப்பேற்றுக்காக காத்திருக்கும் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த தடுப்பூசியை இப்போதைக்கு போடாமல் விடுவது நல்லது. அது போல கடுமையான அலர்ஜி மற்றும் கடுமையான காய்ச்சல் உள்ளவர்களும் அது குறித்து தடுப்பூசி பெறுவதற்கு முதல் அறிவிப்பது சிறந்தது. போடாமல் விடுவது சிறந்தது.

6.இந்த தடுப்பூசியில் என்ன என்ன பக்க விளைவுகள் உண்டு?

(அதானே பாத்தன் என்னடா இன்னும் இத கேட்கல்லனு) இந்த தடுப்பூசி ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு ஏற்பட்ட பக்க விளைவுகளாக தலைவலி, உடல் வலி, குமட்டல், காய்ச்சல் போன்று சிறு பக்கவிளைவுகளை பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இவையன்றி வேறு பெரிய எந்த சைட் எபக்ட்டடுகளும் பதிவாகவில்லை. இன்னும் தெரிந்து கொள்ள https://www.gov.uk/government/publications/regulatory-approval-of-covid-19-vaccine-astrazeneca/information-for-uk-recipients-on-covid-19-vaccine-astrazeneca

7. இந்த தடுப்பூசியின் கொரோனா நோய் தடுப்பு திறன் எப்படி? Pfizer - BioNTech தடுப்பூசி போல எபக்டிவானாதா? இல்லை மட்டமானதா?

(இப்ப புத்திய காட்ற லா!..அமெரிக்கா காரன் செஞ்சா நம்புவ நம்முடவன் செஞ்சா நம்பமாட்ட) கிட்டத்தட்ட 70% நோய் தடுப்பு திறனை இந்த தடுப்பூசி கொண்டுள்ளதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அது போல இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் யாருக்கும் தீவிர கோவிட் நோய் ஏற்படவில்லை, கோவிட் நோயால் மரணமும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பைசர் தடுப்பூசியின் கோவிட் நோய் தடுப்பு திறன் கிட்டத்தட்ட 95%. ஆனால் இது மிகவும் விலை கூடியது. இறக்குமதி செய்வதற்கும் சேமித்து வைப்பதற்கும்‌ விஷேட கொள்கலன்கள் தேவைப்படும். (நமெக்கெல்லாம் கட்டுப்படியாகா). கோவிஸீல்ட் தடுப்பூசியை நமது சாதாரண குளிர்சாதப்பெட்டிகளில் +2 முதல் +8 டிகிரி குளிரில் பாதுகாக்க முடியும். விலையும் குறைவு. இதுவும் சிறந்த தடுப்பூசி தான் என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

8. ஒரு தடவை வக்சீன் போட்டால் போதுமா? இரண்டு மூன்று தடவை போட வேண்டுமா?

(விடமாட்டான் போல இருக்கே!)முழுமையான நோய்த்தடுப்பு பயனைப் பெறுவதற்கு இந்த வக்சீனில் இரண்டு டோஸ்கள் எடுக்கப்பட வேண்டும். முதலாவது டோஸ் போட்டதிலிருந்து 4 தொடக்கம் 12 வாரங்களுக்குள் இரண்டாவது டோசை போட்டுக்கொள்ள வேண்டும். அப்போது இதன் செயற்திறன் கிட்டத்தட்ட 80 தொடக்கம் 90 வீதம் அதிகரிக்கும். முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

9. இந்த வக்சீன் போட்டால் எவ்வளவு காலத்திற்கு கோரோனாவில் இருந்து பாதுகாப்புப் பெற முடியும்?


இது குறித்து தெளிவாக இன்னும் தெரியவில்லை. குறைந்தது ஒரு வருட காலத்திற்கு பாதுகாப்பு பெற முடியும். இன்னும் சில வருடங்கள் சென்றதும் தான் இது குறித்து தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

கடைசியாக ( அப்பாடா ஒருமாரி முடச்சிட்டான்)

10. வக்ஸின் போடுபவர்கள் தம்மிக்க பாணியை குடிக்கலாமா? வேறு கஷாயங்கள் பாவிக்கலாமா?


(பாவித்ராட ஆளா இருப்பான் போல கடும் சின்ஸியரா வேற கேட்கான்) இவைகளை குடிப்பதால் வக்சீனின் செயற் திறனில் எந்த பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு இல்லை. சிலவேளைகளில் தம்மிக பாணியோ கஷாயாமோ வக்சீன் போட்டதன் காராணாமாக வேலை செய்யாமல் போனால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. ஆகவே வக்சீன் போட்டவர்கள் அவைகளே எடுக்க அவசியம் இல்லை. வக்சீன் போடாதவர்களும் அவைகளை எடுக்க வேண்டியதில்லை.


Dr.PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்
ஆதார வைத்தியசாலை 
அக்கரைப்பற்று


பிற்குறிப்பு-


இந்த வக்சீனை போடக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் கட்டாயம் போட்டுக் கொள்ளுங்கள். வக்சீன் குறித்த மேலதிக தகவல்களை உரியவர்களிடம் பெற்று கொள்ளுங்கள்.

கோவிஷீல்ட் வக்சீன் போடலாமா? வேண்டாமா? கோவிஷீல்ட் வக்சீன் போடலாமா? வேண்டாமா? Reviewed by Editor on January 30, 2021 Rating: 5