(றிஸ்வான் சாலிஹூ)
2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாக அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிராந்தியத்தை அழகு படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் செலவில் பெரிய மின்குமிழ் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அக்கரைப்பற்று பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள ஐந்து வட்டாரங்களிலும் பெரிய மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு வருகின்றது என்று அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம். ஏ. றாசீக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எமது பிராந்தியத்தை பெரிய நகரங்களுக்கு ஒத்ததான பிராந்தியமாக பிரகாசிக்க வைக்க முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அதனடிப்படையில் அதாவுல்லாஹ் விளையாட்டு மைதான புனரமைப்பு, சிறுவர் பூங்கா, பாதைகள் அபிவிருத்தி என பல்வேறு வகையான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம்.
அக்கரைப்பற்று பிரதேச சபையானது தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம். அதாஉல்லாவின் முயற்சியினால் ஐந்து வட்டரங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டு அதன் தவிசாளராக கடமையை ஏற்று இறைவனின் உதவியுடன் என்னால் முடியுமான சகல துறைகளிலும் சேவையாற்றி வருகிறேன். அந்த அடிப்படையில் பிராந்தியத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக செய்து முடிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களின் ஆசீர்வாதத்துடன் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சிறப்பாக செய்து கொண்டு இருக்கின்றேன். என்னுடைய சகல நடவடிக்கைகளுக்கும் பக்கபலமாக இருக்கும் எமது சபையின் உப தவிசாளர், சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் எல்லோரும் நன்றிக்கு உரித்தானவர்கள்.
மேலும் இந்த பிராந்தியத்தின் மக்களின் அத்தியாவசிய விடயங்களை கருத்திற்கொண்டு, 2021ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தினூடாக அதிகளவான நிதி ஒதுக்கி இந்த பிராந்தியத்தை மேலும் அழகுபடுத்த நாங்கள் எண்ணி உள்ளோம் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் அபிவிருத்தி சம்பந்தமான தகவல்களை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வில் இதனை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.
