
நிதியமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் குழந்தைகளுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் இணைக்கப்பட்ட மாணவர்களில் கடந்த ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 40 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (04) வியாழக்கிழமை காலை 9மணிக்கு யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.மகேசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சு.முரளிதரன்,பிரதம கணக்காளர் திரு.கில்பேட் குணம், உதவி மாவட்ட செயலாளர் திருமதி எஸ்.சீ.என். கமலராஜன், மற்றும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு. ரீ.விஸ்வரூபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இரு மாணவர்களுக்கு ரூ.100,000 மற்றும் ரூ.50,000 பெறுமதியான காசோலைகளும் ஏனைய மாணவர்களுக்கு ரூ.10,000 பெறுமதியான காசோலைகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இக்கொடுப்பனவானது மாணவர்கள் திட்டத்தில் இணைக்கப்பட்ட அடிப்படையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
