
எதிர்வரும் நான்கு நாட்களும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (08) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் நாளையதினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்தார்.
நாளை (09) முற்பகல் 10 மணி முதல் அமர்வுகள் ஆரம்பமாகிய பின்னர் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல விடைக்கான கேள்விக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை விவாதம் இடம்பெறும். பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறும் என செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
பெப்ரவரி 10ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணி முதல் 10.30 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பிரதமர் பதில் வழங்குவார். அதன் பின்னர் முற்பகல் 10.30 மணி முதல் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல விடைக்கான கேள்விநேரம் வழங்கப்படும்.
அன்றையதினம் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதுடன், இவ்விவாதம் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இடம்பெறும். அதன் பின்னர் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரரணை மீதான விவாதம் இடம்பெறும்.
பெப்ரவரி 11ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல விடைக்கான கேள்விக்கு நேரம் ஒதுக்கப்படவிருப்பதுடன், பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
அத்துடன், பெப்ரவரி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சுரங்கனி எல்லாவல, கௌரவ கே.பி.சில்வா மற்றும் கௌரவ கபில அபேரத்ன ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும். அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
