
(நா.தனுஜா)
நாட்டிலுள்ள 4,600 பாடசாலைகளுக்கு எவ்வித போட்டிப்பரீட்சைகளோ அல்லது நேர்முகத்தேர்வுகளோ இன்றி அதிபர்களை நியமிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் பாரிய கரும்புள்ளியாகும். இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நாம் அதற்கு எதிராக வழக்குத்தொடர்வதற்குத் தயாராக இருக்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (03) புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது நாட்டின் கல்விக்கட்டமைப்பைப் பெரிதும் பாதிக்கக்கூடிய தீர்மானமொன்றை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. அதாவது எவ்வித தேர்வுகளுமின்றி, பாடசாலைகளுக்கு 4,600 அதிபர்களை நியமிப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது, இந்தத் தீர்மானம் நாட்டின் கல்வித்துறையில் பாரிய கரும்புள்ளியாகும்.
பாடசாலைக்கு அதிபர்களைத் தெரிவுசெய்வது தொடர்பில் யாப்பு ஒன்று காணப்படுவதுடன் அதன்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளும் அதில் கூறப்பட்டுள்ளன. அதன்படி அதிபர்களைத் தெரிவுசெய்யும் போது மொத்தமாக 200 புள்ளிகளுக்கு எழுத்துமூலமான பரீட்சையொன்றும் நேர்முகப்பரீட்சையொன்றும் நடத்தப்பட வேண்டும்.
தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மேற்படி நடைமுறைகளைப் பின்பற்றி, அதிபர் நியமனங்களை உரியவாறு முன்னெடுப்பதற்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் தேவைப்படும் என்பதே இந்தத் தீர்மானத்திற்கான காரணமாகக் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் க.பொ.த சாதாரணத்தரப்பரீட்சையை நடத்த முடியுமென்றால், க.பொ.த உயர்தரப்பரீட்சையையும் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையையும் நடத்தினார்கள் என்றால் அதிபர்களுக்கான போட்டிப்பரீட்சையை ஏன் நடத்தமுடியாது?
சட்டத்தின் ஆட்சியை செயற்படுத்துவதற்காகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது. ஆகவே மேற்கூறப்பட்ட முறையில் அதிபர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டால் நாம் அதற்கு எதிராக நிச்சயமாக வழக்குத்தொடர்வோம். தமக்கு நெருக்கமானவர்களுக்கு பதவி நியமனங்களை வழங்குவதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.
Reviewed by Editor
on
March 03, 2021
Rating: