
அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்
எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்று இலங்கை பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு தருணமும் பெண்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
ஒரு பெண் என்பவள் மகளாக, தாரமாக மற்றும் உலகின் உன்னத பதவியான தாயாகவும் அனைத்து நிலையிலும் நிறைந்திருக்கிறாள். எனவே, பெண்களுக்கு சமூகத்தில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக பெண்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், அவர்களை தைரியமானவர்களாக பலப்படுத்துவது தொடர்பிலும் எப்போதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒரு அரசாங்கமாக, பெண்களுக்கு எதிரான வன்முறையையும், பாகுபாட்டையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். அவர்களது உயர்வின் மூலமான சமூக நலனுக்கான வாய்ப்புக்களை நாம் ஒரு நாடு என்ற ரீதியில் அனுபவித்து வருகின்றோம்.
வரலாற்றில் விகாரமஹா தேவி முதல் நவீன காலத்தில் உலகின் முதலாவது பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் மூலம் இலங்கை பெண்ணின் வீரமும் தலைமைத்துவமும் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த செல்வாக்கிற்கு ஏற்ப இந்நாட்டு பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் தாய்நாட்டில் பல பொறுப்புகளை கொண்டிருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.
பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்கள் பங்களிப்பு செய்வதை நாம் பாராட்டுகின்றோம். சமுதாயத்தின் மிகச்சிறிய அலகான குடும்பத்தை பாதுகாக்க பாடுபடும் பெண், இறுதியாக முழு நாட்டையும் பாதுகாக்க பங்களிக்கிறார்.
பல்வேறு காரணங்களுக்காக இன்று வரை சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பலவாகும். இந்த சவால் மிகுந்த உலகில் அனைத்து பெண்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும். உங்களுக்கு வெற்றி அல்லது தோல்வி கிட்டுவதும் நன்மை அல்லது தீமை கிடைப்பதும் உங்களது சொந்த எண்ணங்கள் மற்றும் செயற்பாட்டின் அடிப்படையிலாகும்.
எனவே சவாலை தெரிவு செய்யுமாறு அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். உங்களது சமூகத்தின் பங்களிப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் தாய் நாட்டின் எதிர்காலம் மற்றும் அபிவிருத்தியடைந்த உலகை நோக்கி அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் நினைவுபடுத்துகின்றேன் என்ற பிரதமரின் வாழ்த்து செய்தியை பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
Reviewed by Editor
on
March 08, 2021
Rating: