மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளை முதல் ஒவ்வொரு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் ஆபத்து நிலை அதிகமுள்ள பகுதி மக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
நாளைய தினம் (08) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 25000 தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாகவும் நாளை தொடக்கம் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று (07) மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 94 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஐந்து மரணங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தியில் 36 வயதுடைய ஏழு மாத கர்ப்பிணி பெண்னொருவரும் அவருடன் இணைந்த குழந்தையும் மரணித்துள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கர்ப்பிணி மரணம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றினை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கைகளிலேயே உள்ளதாகவும் பொதுமக்கள் நிலைமையினை உணர்ந்து செயற்படுமாறும் அவர் வேண்டு கோள்விடுத்துள்ளார்.
