வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு இல்லாத காரணத்தினால் இன்று சில நாட்களில் அதிதீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா அவசர சிகிச்சைப் பிரிவிற்கு நோயாளிகள் கட்டில்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் பி.கேதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தின் தகவல் பிரிவு பொறுப்பாளர் வைத்தியர் இ.நவலோஜிதன், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறியிலாளர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் பொறியியலாளர் ரி.பத்மராஜா, பொறியியலாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொறியிலாளர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான பத்து நோயாளிகள் கட்டில்கள் கையளிக்கப்பட்டது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவு ஆரம்பிப்பதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(தினக்குரல்)
Reviewed by Editor
on
June 12, 2021
Rating:

