(றிஸ்வான் சாலிஹு)
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், அக்கரைப்பற்று பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை, காசோலையாக வழங்கும் நிகழ்வு இன்று (12) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நவப்பிரியா பிரசாந்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளர் சட்டத்தரணி அப்துல் லத்தீப் அவர்களும், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.ரின்ஸான், பிரதேச கலாசார உத்தியோகத்தர்களும் மற்றும் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த ஏழு கலைஞர்களுக்கு தலா ரூபா பத்தாயிரம் பெறுமதியான காசோலைகள் இதில் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.