(அஷ்ரப் ஏ சமட்)
கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (29) வியாழக்கிழமை முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
இலவச சுகாதார சேவையின் சிறந்த பிரதிபலன்களை இலங்கை வாழ் மக்களுக்கு கிடைக்க செய்யும் உன்னதமான நோக்கத்தில் "E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல்" தனியார் நிறுவனத்தின் பூரண நிதி நன்கொடையின் கீழ் இந்த மூன்று மாடிக் கட்டிடம் நிறுவப்பட்டுள்ளது.
சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் 13 கட்டில்களை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை உள்ளடக்கியதாக இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடத்தின் நினைவு பலகை பிரதமரினால் திறந்துவைக்கப்பட்டது.
இதற்கான நிதி நன்கொடை வழங்கிய ""E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல்"" தனியார் நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் இல்யாஸ் அப்துல் கரீம் அவர்களுடன் பிரதமர் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் S.H.முணசிங்க, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, தேசிய வைத்தியசாலையின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் W.K.விக்ரமசிங்க, E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் இல்யாஸ் அப்துல் கரீம் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.