(றிஸ்வான் சாலிஹு)
நாட்டை வழமையான நிலைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியும், முறையான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனையை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபை தலைவர்களுக்கு இடையே நேற்று (17) சனிக்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,
நிதியமைச்சின் பொறுப்புகளை உரிய வகையில் நிறைவேற்றுவதுடன் கட்சியின் பொறுப்புகளையும் சரியான முறையில் முன்னெடுப்பதுடன், ஜனாதிபதியின் "சௌபாக்கிய கெள்கை" வேலைதிட்டத்திற்கு ஏற்ப, திறமையான மக்கள் சேவையை நிறுவுவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பொறுப்பு உள்ளது என்பதை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் மத்தியில் வலியுறுத்தினார்.
நாடு பொருளாதார சவாலை எதிர்கொள்ளும் தற்போதைய காலகட்டத்தில், ஊழலை ஒழிப்பதும், மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் அனைவரின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.