(றிஸ்வான் சாலிஹு)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் வருவதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் புள்ளிவிபரவியல் தெரிவிக்கின்றது.
அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதர்கள் மற்றும் சுகாதார பிரிவினர் முடியுமான வரை இரவு பகலாக களத்தில் நின்று செயற்பட்டு வருகின்றார்கள்.
அதனடிப்படையில், அரச, மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் பொதுமக்களை வினயமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
1.வைத்தியசாலைகளில் எக்காரணம் கொண்டும் சனநெரிசலான, சமூக இடைவெளி பேணப்படாத இடங்களில் அமர வேண்டாம்.
2.வீட்டை விட்டு வெளியேறும்போது அணியும் மாஸ்க்கினை மீண்டும் வீட்டிற்குத் திரும்பும் வரை அவசியமான காரணமின்றி கழற்ற வேண்டாம்.
3.வைத்தியசாலையினுள் நுழையும்போதும் வைத்தியசாலையினை விட்டு வெளியேறும்போதும் கட்டாயமாக கைகளை கழுவிக்கொள்ளுங்கள்.
4.உங்களின் பெயர், தொலைபேசி விபரங்களினை அங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.
ஏனெனில்...
உங்களுக்கு முன்னாலோ உங்களுக்கு பின்னாலோ கொரணாத் தொற்றாளர் அடையாளம் காணப்படுமிடத்து உங்களைக் காப்பாற்றுவது எங்களது கடமையாகும் என்று வைத்திய அதிகாரி காதர் மேலும் தெரிவித்துள்ளார்.
